பொங்கலை முன்னிட்டு வெளியூர் பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பஸ் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கண்காணிக்க சிறப்பு ரோந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று (15.01.2024) ஆம் தேதி காலையில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் இணைந்து தாம்பரம் மாநகர காவல் ஆளிநர்களுடன் தாம்பரம் மாநகர ஆயுதப்படையில் பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடினார். அதனையடுத்து பொங்கல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தாம்பரம் காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:
பொங்கல் மற்றும் காணும் பொங்கல் அன்று சுற்றுலா தளங்கள் மற்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய போதிய அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் குடிபோதையில் வாகன ஓட்டுவது மற்றும் பெண்கள் குழந்தைகள் எதிரான செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.