ஊட்டியில் பிளாட் கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த பலே ஆசாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசா அவின்யூ ரோட்டைச் சேர்ந்தவர் இக்னேஸிஸ் தாமஸ் சுரேஷ் (59). இவர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருணிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ”சென்னை தி.நகரில் இயங்கிவரும் Nathan Foundation நிறுவனத்தின் இயக்குநர் கே.வி.சங்கரலிங்கம் என்பவர் பத்திரிக்கையில் ஒரு விளம்பரம் அளித்திருந்தார். அதில் ஊட்டியில் பிளாட்டுகளை கட்டி விற்பனை செய்து வருவதாகவும், அங்கு 8 மாதத்திற்குள் பிளாட்டுகளை கட்டிடம் கட்டி கொடுக்கப்படும் என்றும் அந்த விளம்பரத்தில் கூறியிருந்தார். அவ்வாறு கட்டித் தராத பட்சத்தில் அதற்கு வாடகை அல்லது இழப்பீட்டு தொகை தருவதாக கூறியிருந்தார். அதை உண்மை என்று நம்பி நானும் எனது மனைவி, மைத்துனர் மற்றும் இரண்டு நண்பர்கள் பெயரிலும் மொத்தம் 6 பிளாட்டுகள் வாங்கிவேனாம். அதற்குண்டான பணம் ரூ.1 கோடியே 45 லட்சத்து 42 ஆயிரத்து 815- செலுத்தினோம். ஆனால் நாதன் நிறுவனத்தின் ஒப்பந்தந்தத்தின்படி 8 மாதத்திற்குள் பிளாட்டுகளை கட்டி கொடுக்காமலும் அதற்குண்டான மாத வாடகை தொகையினை கொடுக்காமலும் மோசடி செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னை நகர மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் நம்பிக்கை ஆவண மோசடி பிரிவில் (EDF-2) வழக்குபதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் சங்கரலிங்கத்தை நேற்று கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பொதுமக்கள் பத்திரிக்கையில் வரும் விளம்பரங்களில் உண்மை தன்மை அறிந்து பணத்தை நிறுவனங்களில் முதலிடு செய்ய வேண்டும். மேலும் M/S.Nathan Foundation நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.