விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினத்தில் எஸ்பி தலைமையில் பதட்டமான இடங்களில் எஸ்பி தலைமையில் அதிரடிப் படையினரின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
இம்மாதம் 18ம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து இந்துக்கள் நீர்நிலைகளில் கரைக்கும் ஊர்வலம் மேற்கொள்வார்கள். அந்த ஊர்வலத்தில் கலவரம் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் சட்டம் ஒழுங்கை அமைதியாக மேற்கொள்ளும் வகையில் தமிழகத்தில் பதட்டம் நிறைந்த பகுதிகளில் இப்போதில் இருந்தே காவல்துறையினர் அதிக கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் நாகப்பட்டினத்தில் எஸ்பி ஹர்ஷ் சிங் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் 60 பேர் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளர் . நாகையில் பதட்டம் நிறைந்த பகுதிகள் எவை என்பதை கண்டறிந்து அந்தப் பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். மேலும் கலவரத்தை கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதிரடிப்படையினருடன் துப்பாக்கி ஏந்தியபடி நாகப்பட்டினம் எஸ்பி ஹர்ஷ்சிங் தலைமையில் அணி வகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த மத்திய அதிவிரைவு படையினர் நாகை மாவட்டத்தில் 7 நாட்கள் முகாமிட்டு, சிபிசிஎல், நாகை கடற்படை அலுவலகம், மீனவ கிராமங்கள், பதற்றமான, கலவரம் நடக்கும் பகுதிகள் மற்றும் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியிலும் நாகை மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணி மேற்கொள்ள உள்ளதாக நாகை மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.