இந்திய அளவில் 3வது இடத்தைப் பிடித்ததற்காக ரவுடிகளை கண்காணிக்கும் ‘Trac KD’ செயலியை உருவாக்கிய சென்னை நகர தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்காவுக்கு மத்திய அரசு விருது வழங்கி பாராட்டியுள்ளது.
25.11.2022 அன்று தமிழ்நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட “TracKD” செயலி, சரித்திர பதிவேடு போக்கிரிகளின் (History Sheet Rowdies) செயல்பாடுகளைக் கண்காணிக்க சென்னை நகர காவல் துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. பிரேம் ஆனந்த் சின்கா உருவாக்கிய இந்தச் செயலி காவல்துறை அதிகாரிகளுக்கு விரல் நுனியில் ரவுடிகள் பற்றிய பல்வேறு விவரங்களைத் தருகிறது. மேலும், 39 மாவட்டங்கள் மற்றும் 9 காவல் ஆணையரகங்களில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் விவரங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளதுடன், சரித்திர பதிவேடு போக்கிரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ள பெரிதும் இந்த செயலி உதவுவது பெரிய சாதனையாகும். ரவுடிகளை ஒழித்து சட்டம் ஒழுங்கை கட்டுக்கோப்பாக வைப்பதில் தமிழக காவல்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமான “TracKD” செயலியை அறிமுகப்படுத்தியதற்காக கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.