தூத்துக்குடியில் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமான தலைமை காவலர் துரைபாண்டி என்பவரது குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தொகையை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் துரைப்பாண்டி குடும்பத்திற்கு வழங்கி ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை தனிப்பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் துரைபாண்டி கடந்த 27.07.2023 அன்று உடல்நலகுறைவால் காலமானார். துரைபாண்டி அவர்களது குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் தங்களால் இயன்ற நிதியுதவி செய்ய வேண்டும் என்ற கருணையுள்ளத்தோடு, அவருடன் 2003ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதுமுள்ள சக காவலர்கள் ஒன்று திரண்டு உதவும் கரங்கள் 2003 சார்பாக ரூபாய் 29,28,500- பணம் நன்கொடையாக பெற்று, அவற்றை காப்பீட்டு பத்திரங்கள், காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க வைப்புத் தொகை ரசீதுகளாக இன்று (30.09.2023) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 2003ம் ஆண்டு காவலர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் துரைப்பாண்டி குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிட ஏடிஎஸ்பி கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு ஏடிஎஸ்பி உன்னிகிருஷ்ணன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.அப்போது எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன், ஒற்றுமையுணர்வுடனும், கருணையுள்ளத்தோடும் இந்த 29 லட்சம் நிதியை வழங்கிய 2003ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு, இந்த பெரிய நிதியுதவி அளித்தமைக்காக துரைப்பாண்டி குடும்பத்தார் சார்பாகவும், மாவட்ட காவல்துறை சார்பாகவும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்த நிதியை திரட்டிய 2003ம் ஆண்டு காவலர்கள் உதவும் கரங்கள் 2003 குழுவைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.