கிணற்றுக்குள் இறங்கி ஆட்டை மீட்ட தீயணைப்புத்துறை வீரருக்கு எஸ்பி பாராட்டு

சாத்தான்குளம் பகுதியில் ஆழ்துளை கிணற்றின் உள்ளே விழுந்த ஆட்டை உயிரை பணயம் வைத்து மீட்ட தீயணைப்புத்துறை வீரருக்கு மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி வழங்கி பாராட்டினார்

கடந்த 06.01.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கடாட்சபுரம் பகுதியில் ஆடு ஒன்று ஆழ்துளை கிணற்றில் உள்ளே விழுந்து சிக்கிக்கொண்டது. அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தான்குளம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்புத்துறையினர் ஆட்டை மீட்பதற்காக முயற்சித்துள்ளனர். அப்போது தீயணைப்புத்துறை வீரரான துரை என்பவர் தனது உடலில் கயிற்றை கட்டிக்கொண்டு தலைகீழாக ஆழ்துளை கிணற்றில் உள்ளே சென்று உயிரை பணயம் வைத்து பத்திரமாக ஆட்டை மீட்டுள்ளார்.

இதனை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர். தனது உயிரை பணயம் வைத்து ஆட்டை மீட்ட சாத்தான்குளம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்புத்துறை வீரர் துரையை தூத்துக்குடி எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று (11.01.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து சால்வை அணிவத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின் போது பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் வாக்கரே அக்ஷய் அணில், தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா, உதவி மாவட்ட அலுவலர் திரு. ராஜு ஆகியோர் உடனிருந்தனர்.

Comments (0)
Add Comment