கடந்த 5 மாதங்களில் பொதுமக்கள் குறைதீர் முகாமில் அளிக்கப்பட்ட 123 புகார் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுத்து தீர்க்கப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் வாரம்தோறும் பொதுமக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டு அவற்றின் மீது விரைந்து விசாரணை நடத்த உத்தரவிட்டு வருகிறார். இதில் நேரடியாக வரும் மூத்த குடிமக்களின் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையாளர்களை மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் மே மாதம் 31ம் தேதி வரை மொத்தம் 193 புகார் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்து இதுவரை 123 மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் 10 மூத்த குடிமக்களின் மனுக்கள் மீது துணை ஆணையாளர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த குறை தீர் முகாமில் பொதுமக்களிடமிருந்து 12 புகார் மனுக்கள் பெறப்பட்டன. காவல் ஆளிநர்களின் துறை ரீதியான 11 மனுக்களை பெற்று அவற்றின் மீது விசாரணை நடத்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட ‘பந்தம்’ திட்டத்தின் உதவி எண் 9499957575 மூலம் உதவிகள் கோரும் மூத்த குடிமக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருவதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.