பாடியில் 400 கிலோ குட்கா பறிமுதல்: ஆவடி கமிஷனர் சங்கர் அதிரடி நடவடிக்கை

சென்னை பாடியில் குடோனில் பதுக்கியிருந்த 400 கிலோ குட்காவை கைப்பற்றி ஆவடி காவல் ஆணையரக போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் போதையில்லா தமிழ்நாடு என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க போலீஸ் கமிஷனர் சங்கர் அதிரடி போதை ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நேற்று 17.09.2023-ஆம் தேதி கொரட்டூர் ஆய்வாளர் ரமேசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது பாடி, ஆபீசர்ஸ் காலனி, கன்னியப்பன் தெருவில் உள்ள குடோனை அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கே மூட்டை மூட்டையாக குட்காா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனையடுத்து அந்த குடோனில் குட்காவை பதுக்கி வைத்த சென்னை கோயம்பேடு, அழகம்மாள் நகர், 3வது தெருவைச் சேர்ந்த பெருமாள் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

அங்கிருந்து 400 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்தனர். அவற்றை வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வந்து பாடியில் குடோனை வாடகைக்கு எடுத்து அதில் பதுக்கி வைத்த பெருமாள் பாடி, கொரட்டூர் பகுதிகளில் சில்லறை கடைகளுக்கு அவற்றை சப்ளை செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்தார். அதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குட்காவை பதுக்கி வைத்த நபரை கைது செய்து குட்காவை பறிமுதல் செய்த ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட போலீசாரை கமிஷனர் சங்கர் வெகுவாக பாராட்டினார்.

Comments (0)
Add Comment