HDFC வங்கியில் விற்பனை மேலாளர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி பலமுறை பணம் கையாடல் செய்த விற்பனை மேலாளர் மற்றும் அவரது தாயை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, அமைந்தகரை HDFC வங்கி, மண்டல மேலாளர் வெங்கடேசன் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.
அமைந்தகரை கிளையில் பணிபுரிந்த அவ்வங்கியின் விற்பனை மேலாளர் திருவொற்றியூரைச் சேர்ந்த மகேந்திரகுமார் (34) மற்றும் அவரது தாயார் விஜயலஷ்மி (54) ஆகிய இருவரும் சேர்ந்து பதவி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். மேலும் அவர்களது LIC POLICY Securityகளை பலமுறை Surrender Value சான்றிதழ்களில் போலியாக தொகையை மாற்றம் செய்து OD Loan தொகையை பலமுறை பெற்றுள்ளனர், இதன் மூலம் வங்கிக்கு மொத்தம் ரூ.1,76,09,172- (ரூபாய் ஒரு கோடியே எழுபத்தி ஆறு லட்சத்து ஒன்பாயிரத்தி நூற்றி எழுபத்தி இரண்டு ரூபாய்) கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு என அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் அருண் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் மகேந்திரகுமார், விஜயலஷ்மி இருவரும் சேர்ந்து விற்பனை மேலாளர் பதவியை தவறாக பயன்படுத்தி சுயலாபம் பெறும் நோக்கத்துடன் வங்கி மற்றும் பொதுமக்களின் அவர்களது பணத்தை கையாடல் செய்து சட்டவிரோதமாக ரூ.1,76,09,172/- பணம் சுயலாபம் அடைந்தது உண்மை என்பது தெரியவந்தது. அதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து எழும்பூர் கூடுதல் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.