சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வந்துள்ள பெல்ஜியன் ஷெப்பர் வகையைச் சேர்ந்த 3 நாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டி அவற்றை மோப்ப நாய் பிரிவிற்கு வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் நிகழ்ந்த கொலை, கொள்ளை, உள்ளிட்ட குற்ற சம்பவ இடங்களில், சென்னை பெருநகர காவல் மோப்ப நாய் பிரிவின் மோப்ப நாய்கள் மூலம் தங்களது திறமைகளால் அநேக வழக்குகளில் குற்ற நிகழ்வுகள் மற்றும் குற்றவாளிகளை கைது செய்ய பெரிதும் உதவுகின்றன. மேலும், வெடிகுண்டு கண்டறிதல், போதை பொருட்கள் கண்டறிதல் சம்பவங்களிலும் மோப்ப நாய்கள் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து பெரிதும் உதவுகின்றன. இதற்காக, சென்னை பெருநரக காவல் மோப்ப நாய் பிரிவிலுள்ள நாய்களுக்கு பிரத்யேக பயிற்சிகள் மற்றும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று (24.04.2024) காலை ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வந்துள்ள பெல்ஜியன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த 3 மாதங்களான 3 நாய் குட்டிகளுக்கு, கார்லோஸ், சார்லஸ் மற்றும் லாண்டோ (Carlos, Charles and Lando) என்று பெயரிட்டு, சென்னை பெருநகர காவல், மோப்பநாய் பிரிவிற்கு வழங்கினார். புதிய நாய்குட்டிகளுக்கு காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில் பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே ஓய்வுபெற்ற 5 நாய்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக மாதவரம் நாய்கள் பராமரிக்கும் இடத்தில் பராமரிக்கப்பட்டு, அவற்றின் அர்ப்பணிப்புச் சேவைக்குப் பிறகு உரிய பராமரிப்பும் மரியாதையும் மருத்துவ சோதனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.