ஆவடி காவல் ஆணையரகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆவடி காவல் ஆணையரகம் காவல் ஆணையாளர் சங்கர் அறிவுறுத்தலின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவில் கூடுதல் துணை ஆணையாளர் கீதா தலைமையின் கீழ் பெண் காவல் ஆய்வாளர்கள், பெண் உதவி ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் கொண்ட பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவினர் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆவடி மற்றும் செங்குன்றம் காவல் மாவட்டங்களில் உள்ள பெண்கள் பயிலும் கல்லூரிகள், பள்ளிகள், தொழிற்சாலைகள், ஆகிய இடங்களுக்கு சென்று பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை, அதனால் ஏற்படும் விளைவுகள், சமூக வளைதளங்களினால் ஏற்படும் தீமைகள் ஆகியவற்றில் இருந்து தற்காத்துக்கொள்வது தொடர்பாக சுமார் 47 கல்லூரி, பள்ளிகளில் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக மகளிர் சுய உதவி குழுக்கள், அங்காடிகள், வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று தமிழ்நாடு காவல் துறையின் பெண்களின் அவசர கால செயலியான காவலன் உதவி செயலி (SOS – காவலன் உதவி ) என்ற செயலியை சுமார் 10,700 பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பெண்களுக்கு அவசர காலங்களில் உதவி தேவைப்படும் நேரங்களில் அரசால், காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண்களான குழந்தைகள் நல உதவி எண் – 1098, பெண்களுக்கான உதவி எண் – 1091, பொது உதவி எண் – 181, பெண்கள் பாதுகாப்பு திட்டம் – 112, இணையவழி பணம் இழப்பு புகார் – 1930, சிலிண்டர் கேஸ் கசிவு புகார் – 1906 ஆகிய எண்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இப்பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஆவடி காவல் ஆணையரகத்தில் தொடர்ந்து பெண்களுக்கான சேவைகளை திறம்பட செயல்படுத்தி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான புகார்களை இக்குற்றத் தடுப்பு பிரிவினர் மூலம் விசாரித்து துரித நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் வழிகாட்டுதல் நடைமுறைகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Comments (0)
Add Comment