சென்னை நகரில் போலீசார் நடத்திய ரவுடிகள் வேட்டையில் திருமங்கலத்தில் எதிரியை போட்டுத்தள்ள துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கூலிப்படை கும்பல் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பட்டினப்பாக்கம், கடற்கரையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி சென்னை புளியந்தோப்பு பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக சந்துரு, அரக்கோணத்தை சேர்ந்த ஜெயபால், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த யமகா மணி ஆகிய 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும் பலரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயபால் உள்ளிட்டோர் சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வௌிவந்து தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 21 பேரை நேற்று சென்னை திருமங்கலம் போலீசார் துப்பாக்கி, அரிவாள், குண்டுகளுடன் கைது செய்தனர்.
அது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:–
ஆற்காடு சுரேஷ் கொலையில் தொடர்புடைய நபர்கள் சென்னை திருமங்கலம் பகுதியில் தங்கியிருப்பதாக சென்னை நகர காவல்துறையின் அதிதீவிர குற்றப்பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் சென்னை நகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ராகார்க் நேரடி மேற்பார்வையில் திருமங்கலம் தனிப்படை போலீசார் மார்ச் 13ம் தேதி ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஜெயபால் (63), நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்கிற சுரேஷ் (24), நெல்லை, ராமயன்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்கிற மதன் (30 வயது) மற்றும் பிரசன்னா (31), சென்னை கானத்தூர் வசந்த் டேவிட் (29), அண்ணாநகர் செல்வபாரதி (26), அசோக்நகர் ராஜ்பிரகாஷ் காட்வின் @ ராஜ்குமார் @ தம்பிராஜன் (57) உட்பட 17 நபர்களை திருமங்கலம் பகுதியில் வைத்து கைது செய்தனர். ஜெயபால் உள்ளிட்டோரிடம் நடத்திய விசாரணையில் தங்களது எதிரியை போட்டுத்தள்ளுவதற்காக சென்னை திருமங்கலத்தில் அறை எடுத்து தங்கியிருந்ததாக தெரிவித்தனர்.
அவர்களிடம் விசாரணை செய்த போது 4 கைத்துப்பாக்கிகள், 84 தோட்டாக்கள்,11 கத்தி, 5 கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடுத்தடுத்த விசாரணையில் இதுவரை மொத்தம் 21 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருமங்கலம் பகுதியில் உள்ள ரெஸ்டாரண்டில் உணவு அருந்துவதற்காக குற்றவாளிகள் பட்டாக் கத்திகள் துப்பாக்கி களுடன் வந்திருக்கிறார்கள். இதுதொடர்பாக காவல்துறைக்கு வந்த தகவலின் பேரில் விசாரணை மேற் கொண்ட பொழுது 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எங்கிருந்து துப்பாக்கிகள் கிடைத்தன என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இவ்வாறு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்தார்.