வடபழனி தனியார் ஓட்டலில் வைரக்கல் வியாபாரியிடம் பல லட்சம் மதிப்புள்ள வைரக்கல்லை திருடிச் சென்ற 4 நபர்கள் 12 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். வைரக்கல் மீட்கப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, அண்ணா நகர், 17வது தெருவில் வசித்து வரும் சந்திரசேகர் (69) என்பவர் வைரக்கல் வியாபாரம் செய்து வருகிறார். சில நபர்கள் வைரக்கல் வாங்குவதற்காக அண்ணா நகரிலுள்ள சந்திரசேகரின் வீட்டிற்கு சென்று வைரக்கல்லை பரிசோதித்து பார்த்துவிட்டு, விலையை பேசி வைரக்கல்லை வாங்கி கொள்வதாகவும், நாங்கள் வடபழனியில் உள்ள ஓட்டலில் தங்கியிருக்கும் அறைக்கு வந்து பணத்தை பெற்றுக் கொண்டு, வைரக்கல்லை தருமாறும் கூறிச் சென்றனர். அதன்பேரில், சந்திரசேகர் நேற்று (04.05.2025) மதியம், வடபழனியிலுள்ள ஓட்டலுக்கு சென்று அங்குள்ள ஒரு அறையில் தங்கியிருந்த மேற்படி நபர்களிடம் வைரக்கல்லை காண்பித்தபோது, அந்த நபர்கள், சந்திரசேகரை மேற்படி அறையில் கயிற்றால் அறையில் கயிற்றால் கட்டிப்போட்டு வைரக்கல்லை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர்.
கட்டப்பட்டிருந்த சந்திரசேகர் வெளியே வந்து, இந்தச் சம்பவம் குறித்து வடபழனி காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேற்கண்ட சம்பவம் தொடர்பாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், தி.நகர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குத்தாலிங்கம் மேற்பார்வையில், வடபழனி உதவி ஆணையாளர் மற்றும் வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்து, தனிப்படையினர் சென்னை மற்றும் அருகிலுள்ள எல்லையோர மாவட்ட போக்குவரத்து பகுதிகளில் தீவிர விசாரணை செய்தனர்.
சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், எதிரிகள் தப்பிச் சென்ற காரின் அடையாளம் மற்றும் பதிவெண்ணை கொண்டு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் அதிவேகமாக சென்ற THAR வகை காரை பின் தொடர்ந்து சென்று, தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனை சாவடிக்கு அருகே மேற்படி காரை மடக்கிப் பிடித்து, காரில் இருந்த எதிரிகள் சென்னை ஐயப்பன் தாங்கலைச் சேர்ந்த ஜான் லாயிட் (34), வளசரவாக்கம் விஜய் (24), திருவேற்காடு ரதீஷ் (28), ராமநாதபுரம் அருண் பாண்டியராஜன் (32) ஆகிய 4 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து புகார்தாரரின் பல லட்சம் மதிப்புள்ள வைரக்கல் மீட்கப்பட்டு, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய THAR வகை அதிவேக கார் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணைக்குப் பின்னர் 4 எதிரிகளும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர். சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில் சிறப்பாக சென்னை பெருநகர காவல்துறையின் தி.நகர் துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினர் துரித நடவடிக்கையுடன் அதிவேக காரினை பல்வேறு இடங்களில் பின் தொடர்ந்து அதிரடியாக எதிரிகளை கைது செய்து, பல லட்சம் மதிப்புள்ள வைரக்கல்லை மீட்டுள்ளது சிறப்பாகும்.