போலி ஆன்லைன் மூலம் ரூ. 90 லட்சத்தை ஏப்பம் விட்ட பலே கில்லாடிகள் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மாதவரத்தை சேர்ந்த முனைவர் G.மூர்த்தி என்பவர் ஆன்லைன் வர்த்தக முதலீட்டு மோசடி தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். கமிஷனர் அருண் உத்தரவின பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட மூர்த்தி வலைதளத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு போலி ஆன்லைன் வர்த்தக முதலீட்டில் மொத்தம் ரூபாய் 90,77,800- போலியான பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்துள்ளார். விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த அருண் குமார் (33) என்பவரை சேலத்திலும், கிழக்குத் தாம்பரம் கண்ணன் (41) என்பவரை சென்னையிலும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இருவரும் ஆன்லைன் வர்த்தக முதலீட்டு மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை Binance செயலி மூலம் கிரிப்டோ கரன்சியாக மாற்றி 25 சதவிதம் வரை கமிஷன் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் இருவரும் சென்னை, சைதாப்பேட்டை 11வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே இணையதளங்கள் மூலம் முதலீடு செய்யும் போதும் அவற்றை பார்வையிடும் போதும் அதில் குறிப்பிட்டுள்ள விபரங்களை உண்மை என்று நம்பிக்கொண்டு தங்களது பணத்தை யாரிடமும் அனுப்ப வேண்டாம். மேலும் நேரில் பார்க்காமலும் தீர விசாரிக்காமலும் எக்காரணத்தைக் கொண்டும் அந்நிய நபர்களிடம் பணம் எதுவும் கொடுக்கவோ அல்லது இணையவழியாகவோ செலுத்த வேண்டாம் என்றும் அதிகப்படியான கமிஷன் என்று ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறக்கூடாது என்றும் சைபர் குற்றங்களை சைபர் குற்றங்களை 1930 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், www.cybercrime.gov.in என்ற இணையதள வாயிலாகவும் மற்றும் அருகிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.