சென்னை மதுரவாயலில் போதைப்பொருள் வைத்திருந்த 10 பேரை ஏஎன்ஐயூ தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து எல்எஸ்டி ஸ்டாம்புகள், மாத்திரைகள், கஞ்சா மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
போதையில்லாத தமிழகம் என்ற திட்டத்தின் கீழ் சென்னை நகரில் போதைப்பொருள் நடமாட்டத்தை அறவே ஒழிக்க போலீஸ் கமிஷனர் அருண், நுண்ணறிவுப்பிரிவு இணைக்கமிஷனர் தர்மராஜன் நேரடி மேற்பார்வையில் ஏன்ஐயூ என்ற சிறப்பு தனிப்படையை உருவாக்கியுள்ளார். சென்னை நகரம் முழுவதும் இந்த தனிக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து போதை கும்பல்களை கூண்டோடு வளைத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிக்குழுவினர் நேற்று முன்தினம் (12.07.2025) மாலை, மதுரவாயல், காமாட்சி நகர் 2வது மெயின் ரோட்டில் கண்காணித்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் வைத்திருந்த மதுரவாயல் வசந்த் (23), காரனோடை கார்த்திக் (27), ஆகாஷ் (24), முகப்பேர் கிழக்கு கவுதம் (28), சிதம்பரம் ராஜ்குமார் (27), செங்குன்றம் தினேஷ்குமார் (24), மதுரவாயல் பவேஷ் (21), சூளைமேடு திவாகர் (27), கீழ்ப்பாக்கம் ரூபன் (26), அருண் பரிஷித் (27) ஆகிய 10 நபர்களை கூண்டோடு கைது செய்தனர். அவர்களிடமிருந்து 81 கிராம், எல்எஸ்டி ஸ்டாம்புகள், போதை மாத்திரைகள், 53 கிராம் OG கஞ்சா, 350 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம், ராயல் என்பீல்டு புல்லட் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களில் கார்த்திக் மற்றும் ஆகாஷ் மீது ஏற்கனவே ஒரு போதைப்பொருள் வழக்கு உள்ளது. கைது செய்யப்பட்ட 10 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். போதை கும்பலை கைது செய்த தனிக்குழுவினரை கமிஷனர் அருண் வெகுவாக பாராட்டினார்.