சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் பழனி. 2019 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த நாகம்மாள் என்பவர் மூலம் ரேணுகா மற்றும் அவரது மகள் சியாமலீஸ்வரி ஆகியோர் பழனிக்கு அறிமுகமானார்கள். தங்களுக்கு மத்திய மாநில அரசு துறைகளில் பல்வேறு உயரதிகாரிகள் தெரியும் என்றும், பணம் கொடுத்தால் அவர்கள் மூலம் பல்வேறு அரசு துறைகளில் வேலைகள் வாங்கித் தர இயலும் என்றும், தங்களுக்கு State Bank of Indiaவில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினர்.
மேற்படி எதிரிகள் மத்திய அரசு நிறுவனங்களான பாஸ்போர்ட் அலுவலகம், குடியுரிமை பாதுகாப்பு அலுவலகம் மற்றும் பல்வேறு அரசு வங்கிகளில் மத்திய மற்றும் மாநில அரசு வேலைகள் வாங்கித் தருவதாக கூறி சுமார் 55க்கும் மேற்பட்ட வேலை தேடும் அப்பாவி நபர்களிடம் சுமார் 1.50 கோடிக்கு மேல் பணம் பெற்றுக் கொண்டு பெரிய நட்சத்திர ஓட்டல்களில் வைத்து அரசு அதிகாரி போல் செயல்பட்டு போலியாக நேர்க்காணல் நடத்தி மோசடி செய்துள்ளது என தெரியவந்தது.
அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, இவ்வழக்கில் அரசு அதிகாரி போன்று நடித்து மோசடியில் ஈடுபட்ட மாதவரத்தைச் சேர்ந்த சண்முகம் (37) என்பவரை இன்று (29.03.2024) காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சண்முகம் விசாரணைக்குப் பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர். பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளின் நட்பு உள்ளது என்று கூறி அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை காட்டி அரசு வேலை வாங்கி தருவதாக கூறும் நபர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.