பேரிடரில் பொதுமக்களை மீட்ட துரைப்பாக்கம் தலைமைக்காவலருக்கு கமிஷனர் பாராட்டு

மிக்ஜாம் புயல் மீட்பு பணியின் போது, பொதுமக்களை மீட்ட துரைப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த 03.12.2023 அன்று இரவு முதல் 04.12.2023 இரவு வரை, சென்னை பெருநகரில் இடைவிடாது மழை பெய்து, அநேக இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், சென்னை பெருநகரில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொண்டும், சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றியும் வருகின்றனர்.

துரைப்பாக்கம் காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகன பொறுப்பாளரும், தலைமைக் காவலருமான தயாளன் கடந்த 05.12.2023 அன்று துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், OMR சாலை, VPG அவென்யூ பகுதியில் உள்ள 13 தெருக்களில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்த பொதுமக்களை பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் விட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு மழைநீர் சூழ்ந்த பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பை மற்றும் கைக்குழந்தையுடன் வெளியேற முடியாமல் தவித்த கணவன், மனைவியை கண்டு தலைமைக் காவலர் தயாளன் அருகில் சென்று அவர்களிடமிருந்து குழந்தையையும், அவர்களது பையையும் வாங்கி சுமந்து கொண்டு பத்திரமாக அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் கொண்டு சேர்த்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் மிக்ஜாம் புயல் மீட்பு பணியில் சிறப்பாக மீட்பு பணி மேற்கொண்ட தலைமைக் காவலர் தயாளனை, இன்று (08.12.2023) நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.

Comments (0)
Add Comment