மல்யுத்தப் போட்டியில் 87 பதக்கம் பெற்ற சென்னை நகர காவல்துறை

தமிழக காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான நடந்த 63வது Wrestling Cluster-2023 போட்டியில் சென்னைப் பெருநகர காவல்துறை 87 பதக்கங்கள் பெற்று சாதனை செய்தது. வெற்றி பெற்றவர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

63வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான Wrestling Cluster-2023 போட்டியை சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் 08.09.2023 அன்று காலை, புதுப்பேட்டை, ராஜரத்தினம் மைதானத்தில் துவக்கி வைத்தார். இந்தப் போட்டியில், சென்னை பெருநகர காவல்துறை, ஆவடி காவல் ஆணையரகம், தாம்பரம் காவல் ஆணையரகம், தமிழக காவல்துறையின் வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தமிழ்நாடு ஆயுதப்படை, தமிழ்நாடு கமாண்டோ படை (TNCF) என 9 அணிகள் போட்டியிட்டன. இந்தப் போட்டியில் மல்யுத்தம் (Wrestling), கை மல்யுத்தம், பளுதூக்குதல் (Weight Lifting), உடல் அழகு (Body Building), வளு தூக்குதல் (Power Lifting), குத்துச்சண்டை (Boxing), கபடி(Kabaddi) ஆகிய 7 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 28 காவல் அதிகாரிகள் உட்பட சுமார் 652 காவல் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்குபெற்றனர்.

இப்போட்டியில், 34 தங்கப் பதக்கங்கள், 29 வெள்ளி பதக்கங்கள், 24 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 87 பதக்கங்கள் பெற்று, சென்னை பெருநகர காவல் அணி முதல் இடம் பெற்றுள்ளது. மேலும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்திற்கான கேடயம் பெற்று சென்னை பெருநகர காவல்துறை சாதனை படைத்தது.62 பதக்கங்கள் பெற்று இரண்டாவது இடத்தை தமிழ்நாடு ஆயுதப்படை (Armed Police) அணியினரும், 57 பதக்கங்கள் பெற்று மூன்றாம் இடத்தை மத்திய மண்டல (Central Zone) அணியினரும் பெற்றுள்ளனர்.

இன்று (09.09.2023) மாலை எழும்பூர், இராஜரத்தினம் மைதானத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்து கொண்டு, 63வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான Wrestling Cluster-2023 போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை நகர காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) கயல்விழி, துணை ஆணையாளர்கள் தேஷ்முக் சேகர் சஞ்சய், (திருவல்லிக்கேணி) ராதாகிருஷ்ணன் (தலைமையிடம்), சீனிவாசன் (நிர்வாகம்), ராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை), கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு) காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment