பலசரக்கு கடையில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது: 134 கிலோ பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து ரூ. 1,14,000- மதிப்புள்ள 134 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரூபாய் 32,000- ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருட்களை அறவே ஒழிக்கும் பொருட்டு எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு போதைப்பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் அனிதா மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று (09.11.2023) மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கரந்தை பகுதியில் உள்ள கடைகளில் கண்காணித்தனர்.

அப்போது ராமசாமி மகன் மாரிராஜ் (40) என்பவரது பலசரக்கு கடையில் சோதனை மேற்கொண்டபோது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. மாரிராஜிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் மேலக்கரந்தை பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் சாக்கு மூடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீசார் எதிரி மாரிராஜை கைது செய்து அவரிடமிருந்த மொத்தம் ரூபாய் 1,14,000- மதிப்புள்ள 134 கிலோ புகையிலை பொருட்களையும், ரூபாய் 32,000- ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Comments (0)
Add Comment