சென்னை, திருவல்லிக்கேணியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 624 மதுபாட்டில்கள் மற்றும் 1 ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் போதை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டன் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் குறித்து வந்த தகவலின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை ஆணையாளர் தர்மராஜன், துணை ஆணையர் சேகர் தேஷ்முக் மேற்பார்வையில் திருவல்லிக்கேனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தீவிரமா கண்காணித்தனர்.
நேற்று முன்தினம் இரவு (20.04.2024) காவல் குழுவினர் சேப்பாக்கம், வாலாஜா ரோடு அருகில் தனியாக நின்று கொண்டிருந்த ஆட்டோவை சோதனை செய்தனர். அப்போது அதில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து ரகசியமாக அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதனையடுத்து மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த மயிலாப்பூர், மீனாம்பாள் புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (31), செல்வம் (25) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 624 மதுபாட்டில்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.