கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடிகள் 4 பேர் கைது

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடிகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் முள்ளக்காடு ராஜிவ் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி (36). கடந்த 10.09.2023 அன்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்துவின் மகன்கள் முகேஷ் (20), பாலா (19) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர். இதுகுறித்து கருப்பசாமி கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த முகேஷ் மற்றும் பாலா அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் ஆனந்தராஜ் (22) மற்றும் தாளமுத்துநகர், கணபதி நகரை சேர்ந்த கல்யாணி மகன் அருண் (20) ஆகியோருடன் சேர்ந்து கருப்பசாமியிடம் தகராறு செய்து அவரை, கழுத்தை நெறித்து தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து முகேஷ், பாலா, ஆனந்தராஜ் மற்றும் அருண் ஆகிய 4 பேரையும் கைது செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட எதிரி முகேஷ் ஆகியோர் ரவுடிகளாக வலம் வந்ததும் இவர்கள் மீது ஏற்கனவே முத்தையாபுரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment