விஜயகாந்த்தின் மைத்துனரிடம் ரூ.43 கோடி பண மோசடி செய்ததாக தனியார் கட்டுமான உரிமையாளர் மற்றும் மேலாளரை சென்னை மத்திய குற்றப்பிரிவு கைது செய்தனர்.
தேமுதிக நிர்வாகியும், விஜயகாந்த்தின் மைத்துனருமான சுதீஷின் மனைவி பூர்ணஜோதி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ”எனக்கும், எனது கணவருக்கும் சொந்தமாக சென்னை மாதவரம் மெயின் ரோடு 200 அடி சாலையில் சுமார் 2.10 ஏக்கர் காலியிடம் உள்ளது. அதில் அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பனை செய்வதற்காக சென்னையை சேர்ந்த சந்தோஷ் சர்மா என்பவரின் M/s.Lokaa developer Private Limited என்ற நிறுவனத்துடன் கடந்த 2014-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்தேோம். அதன்படி மொத்தம் 234 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி அதில் 78 வீடுகளை நில உரிமையாளரான எனக்கும். 156 வீடுகளை மேற்படி நிறுவனத்திற்கும். ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் எனக்கு ஒதுக்கிய 78 வீடுகளில் 48 வீடுகளை எனக்கு தெரியாமல், எனது கையெழுத்தை போலியாக போட்டு மேற்படி நிறுவனம் வெளியாட்களுக்கு விற்பனை செய்து விட்டனர். அதன் மூலம் சுமார் ரூ.43 கோடி பண மோசடி செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிறுவனத்தை சேர்ந்த சந்தோஷ் சர்மா, சாகர் மற்றும் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் கூறியிருந்தார்.