தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பீர்க்கன்கரணை, வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்கிற விக்கி. இவர் முடிச்சூர் CSI சர்ச் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக நேற்று இரவு 10.30 மணிக்கு போலீசுக்கு தகவல் கிடைத்தது. பீர்க்கங்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விக்னேஷ் என்கிற விக்கி
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்து பீர்க்கங்கரணை போலீசார் விசாரணையை நடத்தினர். அப்போது விக்னேஷ் கொலைக்கான காரணம் தெரியவந்தது. மணிமங்கலம், வரதராஜபுரம் பகுதியில் அமர்ந்திருந்த சந்தோஸ் என்ற நபரிடம், அதே பகுதியைச் சேர்ந்த சூரியகாந்தி என்பவர் ஏன் இங்கு அமர்ந்திருக்கிறாய் என கேட்டு செல்போனை பறித்து சென்றுள்ளார். பின்னர் சந்தோஸின் அம்மா சூரியகாந்தியிடம் பேசி செல்போனை வாங்கி சென்றுள்ளார். இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களிடம், சூரியகாந்தி தன்னிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற விஷயத்தை கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் உள்பட நண்பர்கள் 10 பேர் சேர்ந்து இரவு 10.30 மணிக்கு சூரியகாந்தியின் அண்ணன் ராஜீவ் காந்தி மற்றும் அவரது உறவினர்களை வெட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த சூரியகாந்தி, தன் சகோதரரை வெட்டிய நபர்களை கத்தியால் வெட்டியபடி விரட்டியுள்ளார். இதனால் சந்தோஸின் நண்பர்கள் சிதறி ஓடி விட்டனர். விக்கி (எ) விக்னேஷ் மட்டும் தனியாக மாட்டிக் கொண்டார். அவரை விரட்டி சென்று பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தியால் தலை மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் சூரியகாந்தி வெட்டியுள்ளார். இதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் போன்ற விவரங்கள் தெரியவந்தன.
அதனையடுத்து தனிப்படை போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக சூரியா (எ) சூரியகாந்தி, அமோஸ் மற்றும் குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.