தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் பயிற்சி நிறைவு பெற்ற 24 டிஎஸ்பிக்கள் பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். டிஜிபி சங்கர்ஜிவால் பயிற்சியின் போது முதலிடம் பெற்ற டிஎஸ்பிக்களுக்கு பதக்கங்கள் வழங்கினார்.
தமிழக காவல்துறைக்கு குரூப் ஒன் தேர்வு மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட 9 பெண் மற்றும் 15 ஆண்கள் உள்ளபட மொத்தம் 24 டிஎஸ்பிக்கள் தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் ஓராண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி டிடிஸ்பிக்களில் ஒருவர் முனைவர் பட்டமும், 15 பேர் பொறியியல் பட்டமும், ஒருவர் சித்த மருத்துவத்தில் பட்டமும் இருவர் முதுநிலை பட்டமும் 4 பேர் இளநிலை பட்டமும் பெற்றுள்ளனர்.
இவர்களில் 10 நபர்கள் பல்வேறு அரசு துறைகளிலும் ஒருவர் தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றவர்களாகவும் மீதமுள்ள 13 நபர்கள் முதல் பணியில் இணைந்துள்ளவர்களாகவும் உள்ளனர். வாரகால இப்பயிற்சியில், பயிற்சி சட்ட அறிவு, அறிவியல் சார் காவல் துறை, அதன் உள்ளரங்கு மற்றும் வெளியரங்கு உள்ளிட்ட 52 டிஎஸ்பிக்களுக்கு தேவையான புலனாய்வுதிறன், நவீன மற்றும் கணினிமயமாக்கப்பட்ட மாநில மேம்படுத்தப்பட்ட திறன்கள், உள்நாட்டு பாதுகாப்பு, நுண்ணறிவு, சமுதாய காவல் பணி, தலைமை பண்பு, செய்தி தொடர்பு திறன், சட்ட-அமலாக்க திறன், இணையவழி குற்றங்கள் மற்றும் CCTNS போன்ற பல பயிற்சிகள் திறமை வாய்ந்த துறை சார் நிபுணர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான கவாத்து பயிற்சி, 10 நாட்கள் வனப்பகுதியில் தமிழ்நாடு சிறப்பு இலக்குப் படையினருடனான (STF) மலையேறும் பயிற்சி, நீச்சல், கராத்தே, யோகா, நவீன ஆயுதங்களை கையாளுதல், துப்பாக்கி சுடுதல் மற்றும் வாகனங்கள் ஓட்டுதல் ஆகியபயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், ஐல்லிக்கட்டு மற்றும் கார்த்திகை தீபம் போன்ற பாதுகாப்பு பணிகளின் போது நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டு களபயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற டிஎஸ்பிக்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தலைமையுரை நிகழ்த்தினார். டிஜிபி சங்கர் ஜிவால், பயிற்சி நிறைவு பெற்ற டிஎஸ்பிக்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்று, பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி, விழா சிறப்புரையாற்றினார். மேலும், ஒட்டு மொத்த பயிற்சியில் சிறந்து விளங்கிய பயிற்சி அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் வீரவாள் மற்றும் கோப்பை பரிசளித்தார்.
தமிழ்நாடு போலீஸ் அகாடமி டிஜிபியும், இயக்குநருமான சந்தீப்ராய் ரத்தோர் வரவேற்புரை வழங்கி பயிற்சி அறிக்கை வாசித்தார். கூடுதல் இயக்குநர் ஐஜி தேன்மொழி நன்றியுரை வழங்கினார். விழா ஏற்பாட்டினை துணை இயக்குநர் சுரேஷ்குமார் மற்றும் முனைவர். செந்தில் குமார் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்தார்கள். காவல்துறை இயக்குநர்கள், காவல்துறை கூடுதல் இயக்குநர்கள், பிற துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர்களின் குடும்பத்தாரும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தார்கள்.