தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் 164 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் குற்றங்களை குறைக்கும் வண்ணம் தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கடந்த 3.11.2023 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏரல் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில், தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ராசு மகன் சேகர் (64) என்பவர் மதுபோதையில் கொலை செய்யப்பட்டார். அது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி களக்காடு பகுதியை சேர்ந்த சேகர் மகன் சிவசூரியன் (26) என்பவரை ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
கடந்த 27.09.2023 அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மங்கலகுறிச்சி to திருப்பதி ரோடு பகுதியில், கட்டாரிமங்கலம் பகுதியை சேர்ந்த கேபிரியல் மகன் எப்ட்வின் குணா (27) என்பவரை தாக்கி அவரிடமிருந்த வாட்ச்சை பறித்து சென்ற வழக்கில் ஏரல் சிவராமமங்கலம் பகுதியை சேர்ந்த வீரதுரை மகன் தண்டபாணி (21) என்பவரை ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேற்படி வழக்குகளின் எதிரிகளான சிவசூரியன் மற்றும் தண்டபாணி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதாவும், கடந்த 02.11.2023 அன்று தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 6 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, மீனவர் காலனியை சேர்ந்த நியூட்டன் மகன் அல்பன் (32) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
மேற்படி வழக்கின் எதிரியான அல்பன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாளும் தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணனிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். காவல் ஆய்வாளர்களின் அறிக்கையினை ஆய்வு செய்த எஸ்பி பாலாஜி சரவணன் அவற்றின் அடிப்படையில் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் லட்சுமிபதி சிவசூரியன், தண்டபாணி, அல்பன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 எதிரிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 30 எதிரிகள் உட்பட 164 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.