சென்னையில் 15 கஞ்சா வியாபாரிகள் கைது: 34 கிலோ பறிமுதல்

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 34.182 கிலோ கஞ்சா, 103 கிராம் கஞ்சா பூ, 5 செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ.4,63,300/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர், “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 28.08.2023 முதல் 03.09.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 34.182 கிலோ கஞ்சா, 103 கிராம் கஞ்சா பூ, 5 செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ. 4,63,300- பறிமுதல் செய்யப்பட்டது.

Comments (0)
Add Comment