சென்னை பெருநகர காவல், சைபர் கிரைம் நடத்திய ’’சைபர் ஹேக்கத்தான்’’ (Cyber Hackathon) போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற 3 குழுவினருக்கு காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தற்போது தகவல் தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இணையதளத்தின் பயன்பாடு பெருமளவில் அதிகரித்து வரும் சூழலில், அதன் வழியே நிகழ்த்தப் பெறும் சைபர் குற்றங்களும் பெருகிவிட்டன. சைபர் குற்றங்கள் மட்டுமின்றி அனைத்து வகை குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளும் இணையதளத்தை, அதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொள்கின்றனர். சைபர் குற்றங்களை புலனாய்வு செய்யவும், குற்றவாளிகளை கண்டறியவும், நவீன தொழில்நுட்பங்களின் உதவி தேவைப்படுகிறது. புதுவகை சைபர் குற்றங்களுக்கான தீர்வினை கண்டறியும் முயற்சியின் முதல் படியாக, சென்னை பெருநகர காவல்துறை கடந்த டிசம்பர் மாதம் 1வது சைபர் ஹேக்கத்தான் போட்டியை நடத்தியது.

தற்பொழுது புதுவித சவால்களுடன் அதற்கான தீர்வினை காண, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சென்னை விஐடி பல்கலைக்கழகம் இணைந்து 2வது சைபர் ஹேக்கத்தான் போட்டியை கடந்த 13.04.2023 அன்று அறிவித்தது. அதன்பேரில், 2வது சைபர் ஹேக்கத்தானின் சவால்களானது சைபர் கிரைம் அதிகாரிகளின் புலனாய்விற்கு உதவி செய்யும் வகையில் 1.கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை மற்றும் தொடர்புடைய வாலட்டினை கண்டறிதல், 2.மொபைல் போனிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை விரைந்து மீட்டெடுத்தல், 3.குறிப்பிட்ட சொற்பதங்களை கொண்டு சமூக வலைதளங்களில் தொடர்புடைய பதிவுகளை தேடுதல், 4.சிசிடிவி காட்சிப் பதிவுகளில், வழக்கத்திற்கு மாறாக தென்படும் நபர்களையோ, பொருட்களையோ கண்டறிந்து தொடர்புடைய அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல், 5.டெலிகிராம் போன் அழைப்பின் அழைப்பாளரின் நிகழ்கால இருப்பிடத்தை கண்டறிதல் ஆகிய 5 தலைப்புகளில் போட்டியை அறிவித்தது.
மேலும், இப்போட்டியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா 20.05.2023 அன்று நடைபெறும் எனவும், 3 குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசு, ரூ.50,000/-, 2வது பரிசு ரூ.30,000/-, ரூ.20,000/- மற்றும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் கலந்து கொள்ள இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 700 குழுக்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் முதல் கட்ட தேர்விற்கு என 105 ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில, சைபர் கிரைம் வல்லுனர்கள் அடங்கிய நடுவர் குழுவினர் அவற்றுள் சிறந்த 50 ஆய்வறிக்கைகளை தேர்ந்தெடுத்துள்ளனர்.
19.05.2023 அன்று நடைபெற்ற அரை இறுதி சுற்றில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களை சேர்ந்த 37 குழுக்கள் மீது தமிழ்நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளிலிருந்தும் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் சைபர் தொழில் நுட்ப வல்லுநர்கள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் இவர்களில் சிறந்த 16 குழுக்களை தேர்ந்தெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (20.05.2023), சென்னை, கேளம்பாக்கத்திலுள்ள VIT பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற 2வது சைபர் ஹேக்கத்தானின் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழாவில், சிறந்த 3 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ‘‘2வது சைபர் ஹேக்கத்தான்” (Cyber Hackathon) போட்டியில் முதல் இடம் பெற்ற VIT பல்கலைக்கழகத்தின் நிஷாத் பூலே, பிரஜ்வால் ஸ்ரீமாலி மற்றும் ராபின் ராய் அடங்கிய குழுவுக்கு மற்றும் பணம் ரூ. 50,000/-ம், 2வது இடம் பெற்ற சென்னை, KRM Public பள்ளியின் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரதிக் என்பவருக்கு ரூ.30,000/-ம், 3வது இடம்பெற்ற கோயம்புத்தூர், ஶ்ரீகிருஷ்ணா பொறியில் கல்லூரியின் ஸ்நேஹா ஜெனார்தனன், யாஷு வெங்கட் குழுவுக்கு 20,000/-ம் என மொத்தம் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கினார். மேலும், வெற்றி பெற்ற 3 குழுவுக்கும், கோப்பை, சான்றிதழ்களுடன் ரூ.45,000/- மதிப்பிலான கணினி தடயவியல் பயிற்சி வகுப்பு கூப்பன் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் VIT சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் காஞ்சனா பாஸ்கரன், சைபர் கிரைம் வல்லுநர் குழுவினர், பல்கலைக்கழக, பேராசிரியர்கள், மத்திய குற்றப்பிரிவு, கூடுதல் ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.