சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் நேற்று (02.03.2026) சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் “இலங்கை நாட்டைச் சேர்ந்த பேபி லோனா (வயது 48) என்பவர் போலி ஆவணங்கள் மூலம் தனது இலங்கை நாட்டு குடியுரிமையை மறைத்து தனது பெயரில் போலி பாஸ்போர்ட் பெற்றுள்ளார். அதன் மூலம் இலங்கைக்கு செல்வதற்காக முயற்சி செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் மத்தியக் குற்றப்பிரிவு போலி பாஸ்போர்ட் புலனாய்வு பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் இலங்கையைச் சேர்ந்த பேபி லோனா (48) என்பவரின் பெற்றோர்கள் இலங்கை நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதும், இந்தியரான முஸ்தாக் அகமது என்பவரை திருமணம் செய்து கொண்டு அவரது குடும்பத்தோடு 2015ம் ஆண்டு இலங்கையிலிருந்து விமானம் வழியாக இந்தியாவிற்கு குடிவந்துள்ளார். தஞ்சாவூர், திருவிடைமருதூரில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளார்.
அப்போது இந்திய ஆவணங்களான ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார். அதன் அடிப்படையில் இந்திய பாஸ்போர்ட் பெற்று, தற்போது இலங்கைக்கு செல்ல முயன்றுள்ளார் என்பது போன்ற விவரங்கள் தெரியவந்தன. போலி பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஏஜெண்டுகள் மூலமாக பாஸ்போர்ட் மற்றும் விசா பெற விண்ணப்பிக்கும் பொது மக்கள் இது தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக முறையான ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் துணை தூதரகங்களை அணுகி விசாக்களை பெற வேண்டும் என சென்னை மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.