சமீபத்தில், வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கிங் மற்றும் வாட்ஸ்அப் தொடர்புடைய மோசடிகளைப் பற்றிய புகார்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அதிகமாக பெறப்பட்டுள்ளன. இந்த மோசடியில், பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு ஆறு இலக்க OTP குறியீடு SMS மூலம் வரும்.
பின்னர் தெரியாத மொபைல் எண்ணிலிருந்து, பாதிக்கப்பட்ட நபருக்கு வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வரும். அதில் வாட்ஸ்அப் கணக்கிற்கான ஆறு இலக்க குறியீடை எண்ணுக்கு தவறாக அனுப்பப்பட்டுவிட்டதாகவும், அந்த OTP குறியீட்டை பகிருமாறு கேட்டுக் கொள்வார்கள்.
சில நேரங்களில், இந்த ஆறு இலக்க OTP குறியீட்டை பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய தொடர்புகளிலிருந்து வாட்ஸ்அப்பில் கோரலாம். பாதிக்கப்பட்டவர்கள் இதனை உண்மை என்று நம்பி இந்த ஆறு இலக்க OTP குறியீட்டை பகிருவார்கள். ஆனால் உண்மையில், மோசடி செய்யும் நபர் பாதிக்கப்பட்டவரின் தொடர்புகளை ஆள்மாறாட்டம் செய்து செயல்படுகிறார்கள். ஒரு முறை பாதிக்கப்பட்ட நபர் அந்த குறியீட்டை பகிர்ந்துவிட்டால், அவருடைய வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படும் மற்றும் குற்றவாளிகள் அதன் கட்டுப்பாட்டைப் பெறுவர்.
அதன்பிறகு குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட நபரைப் போல ஆள் மாறாட்டம் செய்து, அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு செய்தி அனுப்புவர். அவற்றில் அவசர உதவி, விபத்து செலவுகள், மருத்துவத் தேவைகள் போன்றவற்றிற்காக பண உதவி கோருவர். மேலும், பணத்தை செலுத்த ஒரு வங்கி கணக்கு எண் அல்லது PhonePe, GPay, Paytm போன்ற இணைய பண பரிவர்த்தனை வழிகளை அனுப்புவார்கள். இந்த செய்திகள் பழக்கமான நபர்களிடமிருந்து வருவதால், பெரும்பாலும் சந்தேகம் எழுவதில்லை. இதனால், தகவல் பெறும் நபர் பணத்தை அனுப்பிவிட்டு, பின்னர்தான் இது ஒரு மோசடி என்பதை உணர்கிறார்.
மேலும் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட நபரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் வாட்ஸ்அப் கணக்குகளையும் அதே செயல்படுத்தும் குறியீட்டு முறையைப் பயன்படுத்தி ஹேக் செய்கிறார்கள். இதன் மூலம் இந்த மோசடி தொடர்கிறது.
இந்த வாட்ஸ்அப் மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி?
* நீங்கள் ஒரு 6 இலக்க OTP அல்லது செயல்படுத்தும் குறியீட்டை பெற்றால், அதை யாருடனும் பகிர வேண்டாம். உங்கள் தொடர்புகள், குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் பணம் கேட்டு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பினால், மிகுந்த கவனமாக இருங்கள். * பணம் பரிமாற்றம் செய்யும் முன், அந்த நபரின் அலைபேசியில் தொடர்புகொண்டு அது உண்மையான கோரிக்கையா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். குற்றவாளிகள் உங்கள் தொடர்புகளைப் போல ஆள் மாறாட்டம் செய்யலாம் என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள். உங்கள் வாட்ஸ்அப்பில் Two-Step செயல்படுத்துங்கள், இது உங்கள் பாதுகாப்புடன் வைத்திருக்க உதவும்.
வாட்ஸ்அப் கணக்கை மீட்டெடுப்பது எப்படி? உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா?
உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்தால், உங்கள் கைபேசி எண்ணுடன் மீண்டும் வாட்ஸ்அப்பில் உள் நுழையவும் மற்றும் SMS அல்லது கால் மூலம் பெறும் 6 இலக்க OTP குறியீட்டை உள்ளிடவும். இந்த 6 இலக்க OTP மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை மீண்டும் பதிவுசெய்தவுடன், உங்கள் கணக்கைப் பயன்படுத்தும் நபர் தானாகவே வெளியேற்றப்படுவார். (வாட்ஸ்அப் ஒரே நேரத்தில் ஒரு எண்ணில் மட்டுமே செயல்படுத்த முடியும்.) Two-Step Verification யை இயக்கும் வழிமுறை : Settings → Account → Two-Step Verification என்பதில் சென்று ஒரு PIN யை உருவாக்கவும். இது உங்கள் கணக்கை மேலும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். இந்நேரத்தில், அருகிலுள்ள சைபர் குற்றங்களுக்கான காவல்நிலையத்திற்குச் செல்லலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
ஆகையால், பொதுமக்கள் அனைவரும் இந்த வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடியைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை பெருநகர காவல் துறையினால் அறிவுறுத்தப்படுகிறது. இந்த மோசடியில் சிக்காமல் இருக்க, வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு அம்சங்களை Two-Step Verification யை இயக்குங்கள். ஏதேனும் பணம் இழப்பு ஏற்பட்டால், உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in ணையதளத்தில் புகார் அளிக்கவும்.