தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிக்கு முன்னாள் ஐஜி ராமசுப்பிரமணி பரிசுக்கோப்பைகள் வழங்கி பாராட்டினார்.தேனி அருகே வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேனி மாவட்ட கைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த கைப்பந்தாட்ட போட்டியில் திண்டுக்கல், திருச்சி, தேனி, விழுப்புரம், உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 28 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் திண்டுக்கல் அணி முதல் இடம் பிடித்து வெற்றி கோப்பையை கைப்பற்றியது. திருச்சி 2வது அணியும், மதுரை அணி 3வது இடத்திலும், 4ம் இடத்தில் விழுப்புரம் அணியும் வெற்றி பெற்று கோப்பைகளை பெற்றன. மாநில கைப்பந்தாட்ட கழகத்தின் மாநில தலைவரும், முன்னாள் ஐஜி ராமசுப்பிரமணி, ஐபிஎஸ் இந்த நிகழ்வில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் உமாதேவி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், கைப்பந்தாட்ட கழகத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், நடுவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட கைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர் ஜெயராமன், செயலாளர் விக்னேஷ் குமார், பொருளாளர் ஆதிஷ் குமார் மற்றும் தேனி மாவட்ட கைப்பந்தாட்ட நிர்வாகிகள் ஏற்படுகளை செய்திருந்தனர்