காவல் அதிகாரிகளுக்கான மன அழுத்த மேலாண்மை திட்டப் பயிற்சி: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்

சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகளுக்கான மன அழுத்த மேலாண்மை திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி சென்னை பெருநகர காவல் துறையின் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் பணியின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக மன அழுத்த மேலாண்மை திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பயிற்சி வகுப்பினை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் 20.09.2023 அன்று, வேப்பேரியில் உள்ள காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

இப்பயிற்சி வகுப்பில் காவலர்கள் பணிச்சமநிலை மற்றும் குடும்ப வாழ்வில் சிறந்து விளங்கவும், அவர்களின் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடல் நலனை பேணவும் தகுந்த உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு கீழ் பணிபுரியும் காவலர்கள் மற்றும் காவலர்களின் நலன், குறைகளை கேட்டறிந்து தீர்த்தல், பணியின் போது சக காவலர்கள் மற்றும் காவலர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த மன அழுத்த மேலாண்மை பயிற்சியானது மற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

ஊக்குவிப்பு பேச்சாளர் முனைவர் P.R. சுபாஸ் சந்திரன் நல்வாழ்வு பயிற்சி வகுப்பை நடத்தி, மனநலம் மற்றும் சமூக பிரச்சனைகள் மற்றும் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பேசினார். இந்த பயிற்சி வகுப்பில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி, தலைமையிட இணை ஆணையாளர் கயல்விழி, துணை ஆணையாளர்கள் சீனிவாசன் (நிர்வாகம்), S.S.மகேஷ்வரன் (நவீன காவல்கட்டுப்பாட்டு அறை) ஆகியோர்கள் கலந்து கொண்டனர். சென்னை பெருநகர காவல்துறையில் உள்ள 217 காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் இந்தப் பயிற்சி வகுப்பின் மூலம் பயனடைந்துள்ளனர்.

 

Comments (0)
Add Comment