ரூ. 35 கோடி லோன் பெற்று தருவதாக கூறி ரூ. 70 லட்சம் மோசடி செய்த வழக்கில் முக்கிய எதிரிகள் இருவரை கைது செய்து பணம் ரூ. 12.5 லட்சம், 7 செல்போன்கள் மற்றும் 2 Dongle கருவிகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை, கோயம்பேட்டைச் சேர்ந்த ஆனந்த்குமார். சரக்குகள் ஏற்றி செல்லும் லாஜிஸ்டிக் தொழில் நடத்தி வருகிறார். அந்தத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக கடனுக்காக முயற்சி செய்து வந்துள்ளார். அப்போது பாலசுப்ரமணியன் (எ) பாலு மூலம் ஹரி நாடார் மற்றும் சிலரை வாட்ஸ்அப் மூலம் அறிமுகமாகியுள்ளனர். அப்போது ஹரிநாடார் ரூ. 35 கோடி லோன் பெற்று தருவதாகவும். அதற்கு 2 சதவிகிதம் செயல்முறை கட்டணமாக ரூ. 70 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
அதனை நம்பிய ஆனந்த்குமார் 28/08/2025 அன்று ரூ.70 லட்சம் பணத்தை எதிரிகளின் வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார். அவர்களிடமிருந்து மொத்தம் ரூ. 35 கோடிக்கான Bank of Baroda வங்கியின் 4 டிடிக்களை பெற்றுள்ளார். அதில் 3 டிடிக்களை வங்கியில் செலுத்திய போது, வரைவோலைகள் போலியானவை என தெரியவந்தது..தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆனந்த்குமார் கடந்த 2025ம் ஆண்டு போலீஸ் கமிஷனர் அருணிடம் புகார் அளித்தார்.
அவரது உத்தரவின் பேரில் மத்திமக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் கார்த்திகேயன் வழிகாட்டுதலின்பேரில், நம்பிக்கை ஆவண மோசடி பிரிவு (EDF-I) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் நெல்லையைச் சேர்ந்த ஹரி நாடார் என்பவர் முக்கிய மூளையாக செயல்பட்டு, அவரது கூட்டாளிகளுடன் இணைந்து குளோபல் பைனான்ஸ் கம்பெனி என்ற போலி நிதி நிறுவனத்தை உருவாக்கியது தெரியவந்தது, IDFC வங்கியில் பெயரளவில் கணக்கு ஆரம்பித்து, அதன் மூலம் புகார்தாரரர் வசமிருந்து ரூ.70 லட்சத்தை மோசடியாக பெற்றுக்கொண்டு, 4 போலியான வரைவோலைகள் (DD) தயார் செய்து, புகார்தாருக்கு கொடுத்து மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
அதனையடுத்து EDF-I பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் இந்த மோசடியில் ஈடுபட்ட சேலம், பொன்னம்மாள் பேட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (58), நெல்லை மண்ணூரைச் சேர்ந்த ஹரி நாடார் (42), ஆகிய இருவரை 08.01.2026 அன்று முறையே சேலம் மற்றும் திருச்சியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹரி நாடார் என்பவரிடமிருந்து பணம் ரூ. 12.5 லட்சம், 7 செல்போன்கள் மற்றும் 2 Dongle கருவிகள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் (09.01.2026) சென்னை, எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் (CCB & CBCID) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கின் மற்ற தலைமறைவு எதிரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.