கமிஷனரிடம் நட்சத்திர விருது பெற்ற சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி

சிறந்த காவல் பணிக்கான நட்சத்திர விருதினை சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷீஜாராணிக்கும், நட்சத்திர காலாண்டு விருதை அமைச்சுப்பணி உதவியாளர்அனீஷ்குமாருக்கும் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வழங்கி பாராட்டினார்.


சென்னை நகர காவல்துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்கவகையிலும் பணி செய்யும் காவல் அதிகாரி அல்லது ஆளிநரை கண்டறிந்து அவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு ஒவ்வொரு மாதமும் “நட்சத்திர காவல் விருது” (Police Star of The Month) பெறுவதற்கு தேர்ந்தெடுத்து ரூ. 5 ஆயிரம் பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல் திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ‘நவம்பர் -2023’ மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் காவல் ஆய்வாளர் ஷீஜாராணி தேர்ந்தெடுக்கப்பட்டார். வெளிநாடு செல்பவர்களுக்கு போலியான கல்வி சான்றிதழ்கள், மற்றும் வேலை செய்தது போன்ற போலி பணி அனுபவ சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ருஸ்கேஷ் ரெட்டி, திவாகர் ரெட்டி மற்றும் சென்னையைச் சேர்ந்த முகமதுரியாஸ், மகேஸ்வரன், ஆகிய 4 நபர்களை ஆய்வாளர் ஷீஜாராணி தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்து 500க்கும் மேற்பட்ட போலி கல்வி சான்றிதழ்கள் மற்றும் கணினி உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்த செயலை பாராட்டி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணிக்கு நவம்பர் மாத நட்சத்திர காவல் விருதுக்குரிய பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ. 5,000- வழங்கி பாராட்டினார். மேலும் 2023ம் ஆண்டின் 4வது காலாண்டு பருவத்தின் நட்சத்திர அமைச்சுப் பணியாளர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உதவியாளர் அனீஷ்குமார் (R&T Section) என்பவருக்கு நட்சத்திர அமைச்சுப் பணியாளர் விருது மற்றும் வெகுமதியை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வழங்கினார். கடந்த 10.12.2023 அன்று சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 10 தேர்வு மையங்களில் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுக்கான எழுத்து தேர்வின்போது, சென்னை பெருநகர காவல், உதவியாளர் (அமைச்சுப்பணியாளர்) அனீஷ்குமார் சிறப்பாக பணிபுரிந்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment