நெல்லை மாநகர காவல்துறைக்கு போலீஸ் கமிஷனராக பெண் ஐபிஎஸ் அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி இன்று அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை போலீஸ் கமிஷனராக சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக இருக்கும் மகேஷ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை போலீஸ் கமிஷனராக இருந்த ராஜேந்திரன் தமிழக உளவுப்பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்ட பின்னர் அந்த இடம் நீண்ட நாட்களாக காலியாகவே இருந்தது. தற்போது அந்த இடம் நிரப்பப்பட்டு ஐஜி அந்தஸ்த்தில் இருக்கும் மகேஷ்வரி பணியமர்த்தப்பட்டுள்ளார்.
குரூப்ஒன் தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தமிழக காவல்துறையில் சேர்ந்த மகேஷ்வரி பின்பு எஸ்பியாக பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி, கரூர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு, சென்னை நகர போக்குவரத்து காவல் ஆகிய இடங்களில் பணியாற்றினர். பின்னர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று தென்சென்னை இணைக்கமிஷனர், சேலம் சரக டிஐஜி ஆகிய முக்கிய இடங்களில் பணிபுரிந்தார். பின்னர் 2022ம் ஆண்டு ஐஜியாக பதவி உயர்ந்து சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். 2004ம் பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்வரியின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம். பொறியியல் கல்வியில் BE (ECE) மற்றும் MS (IT) முதுநிலைப் பட்டம் பெற்றவர்.
கொடூரன் கொரோனா சென்னை நகரை உலுக்கி மிரட்டிய போது தென்சென்னை இணைக்கமிஷனராக மகேஷ்வரியின் காவல்பணி நிவாரணம் வழங்குவதில் மெச்சத்தகுந்ததாக அமைந்தது. மேலும் சென்னை நகர மத்தியக் குற்றப்பிரிவில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்த மகேஷ்வரிக்கு சைபைர் கிரைம் பிரிவை திறம்பட செயல்பட வைத்த பெருமையும் உண்டு. நேர்மையான அதிகாரி என்ற பெயர் பெற்ற மகேஷ்வரி சட்டம் ஒழுங்கில் மிக்க அனுபவம் வாய்ந்தவர். தமிழக காவல் எல்லைகளில் ஜாதி ரீதியாக பரபரப்பு மிகுந்த நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக முதன் முதலில் பெண் ஐஜி நியமிக்கப்படுவது தமிழக காவல்துறையில் இதுவே முதன்முறையாகும். அந்த பெருமை மகேஷ்வரியை சாரும்.