சிஆர்பிஎப்பில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு ஜெயில்: பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு

ஆவடி சிஆர்பிஎப்பில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

சென்னை, திருநின்றவூர், கவரப்பாளையம், திருப்பாவை நகரைச் சேர்ந்தவர் மதுரை வீரன் என்பவர் மத்திய குற்றப்பிரிவில் ஒரு புகார் மனு அளித்தார். ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீசில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஆவடி, பட்டாபிராமைச் சேர்ந்த ஏழுமலை (வயது 65) என்பவர் ரூ. 7 லட்சத்து 64 ஆயிரம் மோசடி செய்து விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். 2002ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஏழுமலையை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி ஜேஎம் 1வது கோர்ட்டில் நடந்து வந்தது. போலீசார் தகுந்த ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சாட்சியங்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் சரத்பாபு வாதிட்டார். விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் எதிரி ஏழுமலைக்கு 3 ஆண்டுகள் கடும் காவல் தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6,34,000- வழங்க வேண்டும் என்று நீதிபதி ஸ்டாலின் தீர்ப்பு அளித்தார்.

Comments (0)
Add Comment