சொத்துக்கள் முடக்கம்: ரவுடிகளை ஒழிக்க களம் இறங்கிய ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர்

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளை கண்காணிக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும், ரவுடிகள் மாமூல் வாங்கி சேர்த்த அசையா சொத்துக்களை முடக்க திட்டமிட்டுள்ளதாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக கமிஷனர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:

* ஆவடி காவல் ஆணையரகத்தில் மக்கள் நலன் கருதி பல்வேறு சமுதாய நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

* ரவுடிகளின் நடவடிக்கையை கண்காணிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* முதலாவதாக ரவுடிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து அதனை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

* இதுவரை சுமார் 1100 ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து காவல் இணை ஆணையாளர், மற்றும் துணை ஆணையாளர்கள் தலைமையில் சுமார் 980 வீடுகள் மற்றும் தங்குமிடங்கள் சோதனையிடப்பட்டு கத்தி, கஞ்சா உள்ளிட்ட சட்ட விரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டு சுமார் 287 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 431 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 107 பேர் மீதான பிடியாணைகள் (NBWs) நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 479 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டுள்ளது.
* மேலும், 141 ரவுடிகள், 46 திருட்டு மற்றும் வழிப்பறி குற்றவாளிகள், 40 போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் 13 இதர முக்கிய குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் என சுமார் 240 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
*முக்கிய ரவுடிகள் மீதான வழக்குகளை கண்காணித்து, தலைமறைவான எதிரிகளை பிடிக்கவும் அவர்களை நீதிமன்ற விசாரணையின் போது தொடர்ந்து ஆஜர்படுத்தி வழக்கை விரைந்து முடிக்கவும், தண்டனை பெற்று தரவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
* தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வரும் பிணையில் உள்ள ரவுடிகளின் பிணைகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
* மேலும் தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி ரவுடி மாமுல் வசூலிக்கும் நபர்களின் மீது மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அவ்வாறு அவர்கள் பெற்ற பணத்தில் அவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் பெயர்களில் வாங்கப்பட்ட அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவரும் ரவுடிகளின் மீதான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு சங்கர் தெரிவித்துள்ளார்.

 

 

Comments (0)
Add Comment