சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ரூ. 36.64 லட்சம் மதிப்பில் உருவான பெண் காவலர்கள் தங்கும் அறையை சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர காவல் சார்பில் சர்வதேச மகளிர் தின விழாவை சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் இன்று (08.03.2025) மாலை, எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் துவக்கி வைத்தார். முன்னதாக புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் சேதமடைந்த பெண் காவலர்களுக்கான தங்கும் விடுதி ரூ. 36.64 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. “பூவையர் புத்துணர்ச்சி சிற்றில்” என பெயர் சூட்டப்பட்டு நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள பெண் காவலர்களுக்கான இந்த தங்கும் விடுதியில் (Barrack) 30 படுக்கைகள் கொண்ட சாதாரண அறைகளும், 30 படுக்கைகள் கொண்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகளும், 22 குளியல் அறைகள் மற்றும் 25 ஒப்பனை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களுடன் குறைந்த வாடகையில் பெண் காவலர்கள் தங்கலாம். புதிதாக பயிற்சி முடித்த மற்றும் சென்னைக்கு பணியிட மாறுதலில் வரும் பெண் காவலர்கள் அதிக பட்சமாக 45 நாட்கள் வரையில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பெண் துணைக்கமிஷனர் சுப்புலட்சுமி (நிர்வாகம்) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சிறப்பான பணிகள் குறித்து குறும் படம் திரையிடப்பட்டது. அனைத்து பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு கமிஷனர் அருண் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர்கள் சுப்ரியா சாஹு,.அமுதா, காக்கர்லா உஷா, குற்றப்புலனாய்வுத்துறை சீமா அகர்வால், மத்திய புலனாய்வுத் துறை இணை இயக்குநர் வித்யா ஜெயந்த் குல்கர்னி, கமிஷனர் அருண் மனைவி யமுனாதேவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மகளிர் தின நிகழ்ச்சி குறித்தும், பெண்களின் சிறப்புகள் குறித்தும் சிறப்புரையாற்றி நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
காவல் ஆணையாளர் சிறப்புரையாற்றுகையில், கடினமாக காவல்துறையில் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சிறப்பான பணிகள் குறித்தும், குடும்பத்தையும், காவல்துறை பணியையும் மிகுந்த ஈடுபாட்டுடன் கையாண்டு, அவர்கள் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பான பணிகள் குறித்தும், குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் எதிரிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனைகள் பெற்று தந்தும், காவல் பணியிலும், காவல்துறை விளையாட்டு போட்டிகளிலும், பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சிறப்பான பயிற்சிகள் மற்றும் உத்வேகத்துடன் வெற்றிகள் பெற்று சாதனைகள் படைத்து வருவது குறித்தும் எடுத்துரைத்தார்.
மேலும், சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனைகள் புரிந்த பெண் காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு காவல் ஆணையாளர் சிறப்பு விருந்தினர்களுடன் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். மகளிர் தின விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் மற்றும் காவல் குழுவினருக்கு காவல் ஆணையாளர் நன்றி மற்றும் பாராட்டுகள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையாளர்கள் கபில் குமார் சி சரத்கர் (தலைமையிடம்), கண்ணன் (தெற்கு), ராதிகா, (மத்திய குற்றப்பிரிவு), காவல் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் காவல்துறை குடும்பத்தினர் என சுமார் 3,500க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.