சென்னை நககரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் பாதுகாப்புக்காக தமிழக அரசு அறிமுகப்படுத்திய “காவல் உதவி செயலி”, தற்காப்புப்பயிற்சி மற்றும் சைபர் குற்ற விழிப்புணர்வு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, வளர்ந்து வரும் தொழிலுநுட்ப வளர்ச்சியில், சைபர் குற்றங்களிலிருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள சென்னை பெருநகர காவல் இணைய உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று (01.02.2024) காலை, எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் சைபர் தொழில்நுட்ப உலகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விளம்பர பதாகைகளை வெளியிட்டார். பின்னர் கமிஷனர் தலைமையில், கல்லூரி மாணவிகள் இணைய உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை மேற்கொண்டனர்.
பின்னர், கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இணைய உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை, கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் இணைய உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கல்லூரி மாணவிகள் ஏந்தி, ராஜரத்தினம் மைதானத்திலிருந்து புறப்பட்டு, மாண்டியத் சாலை வழியாக சென்று எழும்பூர்,
அரசு அருங்காட்சியகத்தில் முடிவுற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் பிகே செந்தில்குமாரி. போக்குவரத்து காவல் இணைக்கமிஷனர் மகேஷ்குமார் (தெற்கு), திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மத்திய குற்றப்பிரிவு துணைக்கமிஷனர்கள் நிஷா, ஸ்டாலின், ஆரோக்கியம், பாஸ்கரன், வனிதா (CWC), கீதாஞ்சலி (சைபர் கிரைம்), திரு.I.ஜெயகரன் (ஆயுதப்படை-1), சுமார் 2,000 கல்லூரி மாணவிகள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.