திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றி, ஆன்லைனில் பணம் பறித்த இன்ஸ்டாகிராம் பிரபல வாலிபரை தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சைஜு என்ற 23 வயது வாலிபர் என்பவர் அறிமுகமாகியுள்ளார். பழக்கம் நாளாக நாளாக காதலாக மாறவே, சைஜு அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளார். அதனையடுத்து மதி மயங்கி பேசிய அந்தப் பெண்ணிடம் அவரது அந்தரங்க வீடியோவை வாட்ஸ் அப் மூலம் அனுப்பும்படி சைஜு கேட்டுள்ளார்.
கணவராகப் போகிறவர் என்கிற நம்பிக்கையில் அந்தப் பெண்ணும் தனது அந்தரங்க வீடியோவை வாலிபர் சைஜுக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில் அப்பெண்ணின் அந்தரங்கப் புகைப் படங்களை இணையத்தில் பதிவேற்றி விடுவதாக மிரட்டி வாலிபர் சைஜு பணம் பறிக்கத் தொடங்கியுள்ளார். மானத்துக்குப் பயந்து அந்தப் பெண் ரூ. 1,60,000 ஆயிரம் வரை அனுப்பியுள்ளார். இந்நிலையில் சைஜு மேலும் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். தர மறுத்தால் அந்தரங்க வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவேன் கூறி சைஜு மிரட்டியுள்ளார்.
அதனையடுத்து அந்தப் பெண் இது குறித்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து புகார் மனு அளித்தார். அவரது உத்தரவின் பேரில் தாம்பரம் சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் தீவிர புலன் விசாரணை செய்தனர். அதனையடுத்து மிரட்டல் விடுத்த வாலிபர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவர் என்றும் இன்ஸ்டாகிராமில் பைக் பந்தயம் (Bike Race) தொடர்பான வீடியோக்களைப் பதிவிட்டு ஆயிரக்கணக்கான பின் தொடர்பவர்களைக் (Followers) கொண்ட “பிரபலம்” என்பது தெரியவந்தது.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 செல்போன்களை ஆய்வு செய்ததில், பாதிக்கப்பட்ட பெண் மட்டுமின்றி, மேலும் பல பெண்களுடனும் இதே போன்ற தொடர்பில் இருந்தது தெரியவந்ததையடுத்து, சைஜு மீது தாம்பரம் சைபர் குற்றப்பிரிவு போலீஸ் தனிப்படை மார்த்தாண்டம் சென்று சைஜுவை கைது செய்தனர். அவர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
கமிஷனர் அறிவுரை
பொதுமக்கள் செல்போன் பயன்படுத்தும் போது மிகுந்த விழிப்புணர்வுடனும், கண்காணிப்புடனும் இருக்க வேண்டும் எனவும், சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் நபர்களை எளிதில் நம்பி தங்களது தனிப்பட்ட விவரங்களையோ, புகைப்படங்களையோ பகிர வேண்டாம் கமிஷனர் அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.