தமிழக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் நெல்லையில் நடத்திய அதிரடி ரெய்டில் ரூ. 2,24,500 மதிப்புள்ள போலி ஆப்பிள் ஐபோன் உதிரிபாகங்களை பறிமுதல் செய்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெல்லையில், ஆப்பிள் ஐ போன் உதிரிபாகங்கள் போன்று போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக குமரவேல் என்பவர் திருநெல்வேலி அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல் துறையில் ஒரு புகார் மனு அளித்தார். அமலாக்கம், குற்றப்புலனாய்வுப்பிரிவு ஏடிஜிபி அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில் ஐஜி செந்தில்குமாரி, எஸ்பி அருண் பாலகோபாலன் மேற்பார்வையில் நெல்லை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து தனிப்படையினர் தூத்துக்குடி ஜங்ஷன் பகுதியில் உள்ள Banu & Brothers Mobiles, Kani Mobiles, Mahalakshmi Mobiles um Rama Mobile spares கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அந்தச் சோதனையின் போது தூத்துக்குடியைச் சேர்ந்த சம்சுதீன், கனி, ராம்பிரகாஷ், ஹரீஹரம் ஆகியோர் போலி ஆப்பிள் ஐ போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்திருப்பது கண்டறியப்பட்டது. அதனையடுத்து நால்வரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார் ரூ. 2,24,500 மதிப்புள்ள போலி தயாரிப்புக்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கபிரிவு திருநெல்வேலியில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறது. அதிரடியாக ஆய்வு நடத்தி போலியான ஐபோன் உதிரிபாகங்களை பறிமுதல் செய்த தனிப்படையினரை ஏடிஜிபி அபின் தினேஷ் மோடாக், ஐஜி செந்தில்குமாரி ஆகியோர் வெகுவாகப் பாராட்டினர்.
போலி பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்த தகவல்களை spiprec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044-2851 1587 என்ற தொலைபேசி எண்ணிலோ வழங்குமாறு அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.