சென்னை நகரில் 3 நாட்கள் நிறைவாழ்வு பயிற்சி முகாம் நிறைவுற்றது

சென்னை பெருநகர காவல், உதவி ஆணையாளர்கள் மற்றும் கூடுதல் துணை ஆணையாளர்களுக்கு மூன்று நாட்கள் நிறைவாழ்வு (Well-Being) பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல்துறை அதிகாரிகள் பணித்திறனை மேம்படுத்துவதற்காக, 15.07.2023 அன்று சென்னை பெருநகர காவல், துணை ஆணையாளர்கள் முதல் கூடுதல் ஆணையாளர்கள் (DCs to Addl.COPs) வரை காவல் அதிகாரிகளுக்கு ஒரு நாள் நிறைவாழ்வு பயிற்சி முகாம் (One Day Workshop on Well-Being) நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 01.08.2023 அன்று, வேப்பேரி காவல் ஆணையரகத்தில், உதவி ஆணையாளர்கள் மற்றும் கூடுதல் துணை ஆணையாளர்களுக்கு (ACs and ADCs) 3 நாட்கள் நிறைவாழ்வு பயிற்சி வகுப்பினை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, மேற்படி பயிற்சி வகுப்பின் 2வது மற்றும் 3வது பேட்ச், நிறைவாழ்வு பயிற்சி முகாம்கள் முறையே 07.08.2023 மற்றும் இன்று (08.08.2023) நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில் காவல் அதிகாரிகள் பணியிலும், குடும்ப வாழ்விலும் சிறந்து விளங்கவும், மனநலனையும், உடல் நலனையும் பேணி காக்கவும் தகுந்த மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் தங்களது கீழ் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் நலனை கையாள்வது, குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வது குறித்தும், பணியின் போது சக காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் நடந்து கொள்ளும் முறை குறித்தும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பினை, காவல் நிறைவாழ்வு நிகழ்ச்சியின் மாநில ஒருங்கிணைப்பு அதிகாரி மருத்துவர். ராமசுப்பிரமணியன், மூத்த மனநல மருத்துவர் பிரபாகர், மனநல மருத்துவர் லட்சுமி, மனநல ஆலோசகர்கள் செல்வி. சத்யதனக்கோடி மற்றும் மொஹிதீன் பாட்ஷா ஆகியோர் நடத்தி, மனநலம் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்தும், அதனை திறம்படி எதிர்கொள்வது குறித்தும் எடுத்துரைத்தனர். இப்பயிற்சி முகாமில், 93 உதவி ஆணையாளர்கள் மற்றும் கூடுதல் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பின்னர் இப்பயிற்சி வகுப்பு அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment