சென்னையில் காணாமல் போன 2 மூத்த குடிமக்கள் காவல் கரங்கள் குழுவினரால் மீட்கப்பட்டு பரிதவித்த அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் நவீன காவல் கட்டுப்பாட்டறை, காவல் கரங்கள் உதவி மையம் மூலம் அழைப்புகள் பெறப்படுகின்றன. இதன் மூலம் காவல் கரங்கள் குழுவினர் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். வீடற்ற, ஆதரவற்ற நபர்களுக்கு காவல் துறையுடன் தன்னார்வலர்கள் உதவியுடன் உடனடியாக மீட்கப்படுகின்றனர்,
காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அழைப்பின்பேரில், அவ்விடத்திற்கு காவல் கரங்கள் குழுவினர் உடனடியாக சென்று ஆதரவற்றவர்களை மீட்கின்றனர். உரிய மருத்துவ மற்றும் தங்கும் வசதி இருப்பிடங்கள் வசதிகளுள்ள அரசு மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பு இல்லங்களில் தன்னார்வலர்களின் மூலம் அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் தொடர்ச்சியாக உதவி செய்து ஆதரவற்ற நபர்களின் உறவினர்ளை கண்டறிந்து மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்படுகிறது. ஆதரவற்றவர்களை மேற்குறிப்பிட்ட இல்லங்களில் சேர்த்து நல்ல முறையில் பேணி பராமரித்தும் உதவி செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 13.09.2025 அன்று தேனாம்பேட்டை சிக்னல் அருகே வயதான முதியவர் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக தகவல் வந்தது. அவரை காவல் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மீட்டு அவருக்கு தேவையான உதவிகள் செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ஆறுமுகம் (70) என்பது தெரியவந்தது.
வீட்டை விட்டு வௌியில் வந்தவர் ஞாபக மறதியால் மீண்டும் வீட்டுக்கு செல்ல இயலாமல் பல இடங்களில் சுற்றி திரிந்து வந்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை காவல் நிலைய காவலர்கள் மூலம் அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு, முதியோர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். அவரது புகைப்படத்தை வலைதள வசதிகள் மூலமாக வைத்து விசாரணை செய்ததில், அவர் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், 29.08.2025 அன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் காணாமல் போனதும் தெரியவந்தது.
அவர் காணாமல் போனது தொடர்பாக அவரது வீட்டார் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதனையடுத்து ஆறுமுகத்தின் குடும்ப விவரங்கள் பெறப்பட்டு, அவரது மகன் ரமேஷ் என்பவரை நேற்று (15.05.2025) காவல் கரங்கள் சேவை மையம் மூலம் முதியவர் ஆறுமுகம் அவரது மகன் ரமேஷ் என்பவரிடம் முறையே ஒப்படைக்கப்பட்டு,குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டார்.
இதே போல, இன்று (16.09.2025) புரசைவாக்கம், நோபல் மருத்துவமனை அருகில் ஆதரவற்ற நிலையில் இருந்த 80 வயது மூதாட்டி காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்டார். மூதாட்டி, சரிவர வாய் பேச முடியாமல் இருந்ததும், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மறதியால் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்ததும் தெரியவந்தது. பின்னர் அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சென்னை ஐசிஎப்பைச் சேர்ந்த லோகநாயகி (80) என்பது தெரியவந்தது.
ஐ.சி.எப். போலீசிலும் மூதாட்டி லோகநாயகி காணாமல் போனது தொடர்பாக 11.09.2025 அன்று புகார் அளிக்கப்பட்டு அவரைத் தேடி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து லோகநாயகியின் மகன் சோலிங்கம் என்பவருக்கு தகவல் கொடுத்து, இன்று (16.09.2025) காவல் கரங்கள் உதவி மையம் மூலம் அதிகாரிகள் முன்னிலையில், மீட்கப்பட்ட மூதாட்டி லோகநாயகி பரிதவித்த அவரது மகன் சோலிங்கம் என்பவரிடம் மீள சேர்த்து வைக்கப்பட்டார். மேற்கண்ட மூத்த குடிமக்களின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் சென்னை பெருநகர காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
நடப்பு 2025ம் ஆண்டு இதுவரை ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த 725 நபர்கள் மீட்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு விவரங்கள் சேகரித்து, அதில் 128 நபர்கள் அவர்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை காவல் கரங்கள் சேவை மையம் மூலம் 2021ம் ஆண்டு காணாமல் போன முதல் 1,419 நபர்கள் காணாமல் தவித்த அவர்தம் குடும்பத்துடன் மீள சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். ஆதரவற்ற உதவிகள் கோரும் நிலையில் கண்டறியப்படும் நபர்களுக்கு உதவிட காவல் கரங்கள் உதவி மையம் அழைப்பு எண். 9444717100 என்ற எண்ணை அழைத்திட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.