சென்னை தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரியில் பிரபல ரவுடிகள் இருவர் போலீசாரை அரிவாளால் வெட்டிய போது துப்பாக்கியால் சுடப்பட்டு என்கவுன்ட்டரில் பலியானார்கள்.
சென்னை, தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் முருகேசன், உதவி ஆய்வாளர் சிவகுருனாதன் தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஸ்கோடா காரை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். அப்போது காரில் இருந்த ரவுடிகள் 4 பேர் காவலர்களை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கத் தொடங்கினர்.
இதனையடுத்து போலீஸார் சுட்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் சோட்டா வினோத் ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது. இருவர் மீதும் பல்வேறு கொலை, அடிதடி வழக்குகள், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த உதவி காவல் ஆய்வாளர் சிவகுருநாதன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த என்கவுன்டர் தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட, காரனை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று அதிகாலை காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமகாக வந்த காரை நிறுத்த முற்பட்டபோது நிறுத்தாமல் உதவி காவல் ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலீஸ் ஜீப் மீது மோதி நின்றுள்ளது. காவலர்கள் அருகில் சென்ற போது காரில் இருந்த 4 நபர்கள் ஆயுதங்களுடன் போலீஸாரை தாக்க முற்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஆயுதத்தால் உதவி ஆய்வாளரின் கையில் வெட்டி மீண்டும் தலையில் வெட்ட முயன்றுள்ளார்.
இதனைப்பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும் உதவி ஆய்வாளர் ஒருவரையும் சுட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவத்தில் காயம்பட்ட உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார். காயம்பட்ட ரவுடிகளை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது இருவரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறந்தவர்கள் ஓட்டேரி பகுதியை சேர்ந்த ரவுடிகள் சோட்டா வினோத் , ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது. இருவர் மீது பல்வேறு கொலை, அடிதடி வழக்குகள், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரியில் நடந்த இந்த என்கவுன்டர் சம்பவம் சென்னை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.